வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

லக்ஷ்மண்-ரேக்கா


கிழக்குத் தாம்பரம் ரயில் கேட் மூடப்படும் நேரம் அது. ராஜேஷ் மேற்குத் தாம்பரத்திலிருந்து விரைவாக தனது மோட்டார் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தான். வெய்யில் பரம சூடாக இருந்தது. அணல் காற்று வேறு அடித்துக்கொண்டிருந்தது.

"எப்படியாவது சிக்னலைத் தாண்டிவிடவேண்டும்.. இல்லாட்டி ஆபீஸ் போய் சேரமுடியாது.. முருகா..காப்பாத்து..", என்று யோசித்துக்கொண்டு வண்டியை விர்ரென்று செலுத்தினான். சிக்னலை நெருங்கி விட்டான். இன்னும் பத்து வினாடிகள் போதும். ஆனால், அவன் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு. விதி. கேட் மெதுவாக மூடப்படுவதை கவனித்தான். வண்டி இன்னும் வேகமாக ஓடியது. ஒரு பேருந்து அவன் முன்னால் பட்டென்று பிரேக் அடித்து நின்றது.

"இனி ஒண்ணும் செய்யமுடியாது. பிரேக்கப் போடுடா முட்டாள்", அவன் வண்டி நின்றது. அடிக்கும் அணல்க்காற்றை விட அவன் மூச்சு சூடாகி விட்டது.

"என்ன கொடும சரவணா...புல் ஷிட்..", என்றபடியே வண்டியை அவன் இடதுபுறமிருந்த கரும்புச்சார் கடையை நோக்கி ஓரம்கட்டினான். கடை ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்தது. சற்று நிம்மதியாக இருந்தது ராஜேஷ்சுக்கு. கிங்க்ஸ் ஒன்றை கொளுத்தினான்.

"இந்த கொடும் வெயில்ல எப்படி தம் போட முடியுது தம்பி? கொஞ்சம் ஜூஸ் சாப்டுங்க", என்றார் கடைக்காரர்.

"இல்ல பாஸ். இப்போ எனக்கு இதான் துணை..வுடுங்க..  நானே கடுப்புல இருக்கேன்.."

"ஹீ ஹீ.. ரைட்டு..", என்றார் கடைக்காரர்.

வானத்தை நோக்கியபடி புஸ் புஸ் என்று புகையை ஊதினான். தன்னுடைய தோளை யாரோத் தொட்டார்கள். திடுக்கென்று திரும்பினான்.. ஒரு நிமிடம் ஆடிப்போனான்.. சிகரட் விரலை சுட்டது.. சிலைப்போல் நின்றவன் வெடுக்கென்று முடிந்த சிகரட்டை கீழே எறிந்தான்.. என்ன ஒரு சூடு...

"ஹாய்...ராஜேஷ்..", அவள் தீபிகா. ராஜேசுடைய கல்லூரி வாழ்க்கையின் ஒன் சைடு காதலி. கொச்சையாக சொல்லப்போனால், அவனுடைய சைட்டு. நம்பமுடியவில்லை அவனால்.

"ஹாய்.. தீபிகா? அதானே உன் பேர்?" [என்ன ஒரு நடிப்பு. அவளுக்கு தெரியாதா என்ன?]

"ஞாபகம் இருக்கா?" ஒரு சோகம் வழிகின்ற முகத்தில் எங்கேயோ, ஓரத்தில் ஒரு புன்முறுவல். அதைப்பார்க்கவில்லை ராஜேஷ். அவன் கண்ணுக்கு சோகம் தான் தெரிந்தது.

"என்ன திடீர்ன்னு? ஆச்சர்யமா இருக்கு உன்ன பாக்க. எப்டி இருக்க?"

அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று நடக்க ஆரம்பித்தது. தீபிகாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"ஏன் அழற? எல்லாரும் பாக்கறாங்க. வா இப்டி", என்று அவளை கடையின் ஓரத்திற்கு அழைத்துச் சென்றான். இப்போது அவள் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

"ஏய்... தீபிகா.." ["என் கண்ணே.. என்ன ஆச்சு என் செல்லமே.." என்றது ஒரு மனசாட்சி. "சீ.. சாடிஸ்ட் டா நீ" இன்னொரு மனசாட்சி சொன்னது]

"பிளீஸ்.. அழாமச்சொல்லு..", லேசாக தன் கையை அவள் தோள் மீது உரிமையோடு போட்டான். தீபிகா ஒன்றும் சொல்லவில்லை. ["முருகா..நீ தான்  சாடிஸ்ட்"]

"நான் என்னோட வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிட்டேன். உன்ன காலேஜுல கண்டுக்கக்கூட இல்லை", என்றாள் தீபிகா. இவனுக்கு பேச்சு வரவில்லை.

"ஐ மீன்.. நீ என்ன காலேஜுல காதலிச்சது உண்மை தானே? சொல்லு ராஜேஷ்?"

"ஐ..ஐ..இப்போ எதுக்கு கேக்கற தீபிகா? மொதல்ல அழுகைய நிறுத்து. இந்தா, தொடச்சுக்கோ", அவள் தோளிலிருந்த கை தன் சட்டைப்பாக்கேட்டில் உள்ள கைக்குட்டையை நாடியது. ["இது தான் டா நீ மொதல்ல செஞ்சிருக்கணும்...ராஸ்கல்...சீப் பாஸ்டர்ட்.."]

அவள் துடைத்துக்கொண்டாள். டக்கென்று அவனைப்பார்த்து அபிநயமாக சிரித்தாள். ராஜேஷ் வேறு உலகத்தில் டூயட் பாட ஆரம்பித்துவிட்டான்.

"உன் கூட நெரிய பேசணும் ராஜேஷ். இப்போ பேசலேன்னா வேற எப்போவுமே பேச முடியாது.."

"தீபிகா.. எனக்கு ஒண்ணும் புரியமாட்டேன்குது.. இவ்ளோ நாள் எங்க இருந்த? என்ன ஆச்சு? காலேஜுல நான் சுத்தி சுத்தி வந்தப்போக்கூட நீ கண்டுகிட்டதே இல்லையே.. இப்போ எப்டி? நான் எத நம்பறது?"

"உன்ன பஸ்லேர்ந்துப் பாத்தேன். ரொம்ப வேகமா வண்டி ஓட்டாதே டா..", இவன் நெற்றியில் உள்ள வியர்வையை அதே கைக்குட்டையால் துடைத்தாள். ["என்ன சாமி நடக்குது இங்க?"]

"சரி.. சாயங்காலம் ஏழு மணிக்கு வசந்த பவன் மாடி AC ஹோட்டலுக்கு வந்துடு. நான் பேசணும். மனசு விட்டுப்பேசணும். நிச்சயம் வருவ தானே? இப்போ எனக்கு டைம் இல்லை. அதனாலத்தான் சொல்றேன்"

"அப் கோர்ஸ் தீபிகா.. நிச்சயம் வரேன்"

பச் என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து விரைவாக மறைந்துவிட்டாள்.  இவன் சிலைப்போல அவள் காணாமல் போகும்வரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"தம்பி, இப்போவாவது ஜூஸ் சாப்டுங்க. என்ன?"

"ஹ... செரி குடுங்க பாஸ்.. என்ன நடக்குதுன்னே தெரியல", இன்னொரு கிங்க்ஸ் சிகரட்டை கொளுத்தினான். கேட் துறந்து விட்டது. ஜூசும் வந்தது. மடக் மடக்கென்று ஜூசைக்குடித்துவிட்டு கடைக்காரருக்கு ஐம்பது ருபாய் நோட்டை நீட்டினான். மிச்சக்காசை வாங்குவதற்கு முன்பே சிட்டுப்போல வண்டியில் பறந்து விட்டான்.

"என்ன ஜன்மம் யா இவங்கெல்லாம்", என்று சலித்துக்கொண்டார் கடைக்காரர்.

கேட்டை தாண்டும் போது எதிரில் திலீப் வருவதைப்பார்த்தான். திலீப் அவன் பாலிய சிநேகிதன். ["நடந்ததை அவனிடம் சொல்லிவிட வேண்டும்"]

வண்டியை ஓரம் கட்டி.."டேய் திலீப்.. மொக்கை நாயே.."

"டே மச்சி.. எங்க டா நீ? ஆபீஸ் போல?", திலீப் சிரித்தான்.

"அது கடக்குது விடுடா. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் தம்பி. நம்பவே மாட்ட நீ"

திலீப் புருவத்தை உயர்த்தி "மறுபடியும் எதையோ புதுசா நம்பிருக்க நீ.. மேல சொல்லு.."

"தீபிகா ஞாபகம் இருக்கா? அதான் மச்சி.. அந்த கும் பிகர்.. நம்ம காலேஜ் தான் டா.. நம்ம ஜூனியர்.."

"ஒ.. அவளா.. நீ தான் கும் பிகர்ன்னு சொல்லிக்கணும். அட்டு பீஸ் அது"

"போடாங்கு.. மொக்கை போடாமக்கேளு..." 

"என்னடா..மறுபடியும் லவ்வா அவ மேல? பீர் அடிச்சுகிட்டே பேசலாமா?"

"அது இன்னிக்கு ராத்திரி. பட்.. கேளு.. நான் கேட்டாண்ட தம் அடிசிகிட்டிருந்தேன் டா...அப்போ அவளே வந்து என்கூட பேசினா மச்சி.. அழ வேற ஆரம்பிச்சுட்டா.."

நடந்ததை சொன்னான் ராஜேஷ்.

"இப்போ சொல்லு மச்சி.. இது லவ் தானே? சூப்பர் லைப் மச்சி நாம வாழறது... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா.."

திலீப் கேட்டுக்கொண்டே இருந்தான்.

"அப்டியே என்னவோ ஒரு சூப்பர் பீலிங்கு மச்சி.. இன்னிக்கு நைட் பீர் அடிச்சே ஆகணும்.. miracles seldom happen மச்சி.."

"போதும் டா..போதும் டா.. இன்னிக்கு நைட்டு வா.. பீரோட பேசுவோம்.."

"சுவர் டா.. கால் பண்றேன் சாயங்காலம். இப்போதைக்கு பை"

"பாத்துப் போ தம்பி.. ஒண்ணு மட்டும் சொல்றேன்.. ஒன்ன யாரு வேணும்நாலும் சுலபமா ஏமாத்த முடியும் போலிருக்கு.. சீக்ரம் எல்லாரையும் நம்பிட்ற.. பாத்துக்கோ..."

"அதெல்லாம் இல்ல டா.. இன்னிக்கு நடந்தது நிஜம்.."

"சந்தோசம்.. anyway, சொல்றத சொல்லிட்டேன்..பஸ் வருது..மிஸ் பண்ண முடியாது.. பை டா.. சாயங்காலம் பாப்போம்...", ஓடி விட்டான் திலீப்..

ராஜேஷ் யோசிக்க ஆரம்பித்தான். திலீப் கடைசியாகச் சொன்னது அவனை சிந்திக்க வைத்தது. காலேஜில் இவனை கண்டுக்கக்கூடாத பெண் எப்படி அவ்வளவு வருடம் கழித்து இவனைக்கண்டு வழிய வேண்டும்?

"அப்டி ஒண்ணும் நான் மன்மதன் இல்லையே.. சம்திங் ராங்.. எல்லாம் ரைட்டா நடந்தால், நிச்சயமா ஏதோ ஒரு எடத்துல தப்பு இருக்கு.."

இன்னொரு சிகரட்டை வாயில் வைத்தான். தீக்குச்சியை பற்ற வைத்தான். நெருப்பு இருந்தது, அனால் சிகரட் பற்றவில்லை. மறுபடியும் முயற்சி செய்தான். விரலில் இருந்த தீக்குச்சி இல்லை. உலகம் இருள ஆரம்பித்தது. முழுதும்  இருட்டு..

கண் விழித்தான்.. வலதுபுறமாக படுத்திருந்த அவன், தன் கண் முன்னால் ஒரு செத்துப்போன கரப்பன்பூசியைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்தான். அப்பூச்சி செத்துப்போச்சா என்று சோதித்தான்.

"சரி தான்.. கண்டது கனவு தானா? ஒ**, திலீப் அங்கயும் வந்து கெடுத்துடாண்டா.. anyway, இந்த லக்ஷ்மன்-ரேக்கா பூச்சி மருந்து நல்லாத்தான் வேல செய்யுது.."

கரப்பான்பூச்சியை அறையின் ஓரத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டு, "Fail, அவமானம் டா.. கனவுல கூட பிகர் மாட்ட மாட்டேங்குது. ஹ்ம்ம்.. விடு..அஹம் பிரம்மாஸ்மி.."

சிகரட்டை பற்றவைத்தான். இப்போது சிகரட் பற்றியது. புகை மண்டலம்.      

திங்கள், 6 பிப்ரவரி, 2012

கொன்னாப் பாவம், தின்னாப் போச்சு..

எதுக்கு கொல்லவேண்டும்? எதுக்கு திங்கவேண்டும்? மாமிசம் சாப்பிட்டால் கர்ம மதிப்பெண்கள் எத்தனை? மனிதச்ச்சங்கிலியின் இயல்பான விஷயம் தானே மாமிசம் உண்ணுதல்? அல்லது செடி கொடிகளைத் தின்றால்த்தான் வாழ்வு மேன்மைப்படுமா? இது எல்லோருக்கும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் ஒரு அறியாமைநிலை சங்கடம்.

தெரிந்தே நாம் எதற்க்காக ஒரு உயிரைக்கொன்று திங்க வேண்டும்? இது சைவர்களின் வாதம். அப்படிஎன்றால் செடிகளுக்கு உயிர் இல்லையா? ஐந்தறிவு இல்லாத காரணத்தினால் அது உயிர் பலி ஆகாதா? என்ன ஒரு குழப்பம்!

காலங்காலமாக இந்த நிலைமை ஆராயப்பட்டும், சண்டைப்போடப்பட்டும் வளர்ந்திருக்கிறது. கொழுந்து விட்டெரியவில்லை, தற்காலிகமாக மறைந்துக்கொண்டு ஒளிந்திருக்கிறது. கேள்வி கேட்கும் திறனை மனிதன் இழந்துக்கொண்டிருப்பதனால் இம்மாதிரியான எண்ணங்கள் மறைந்துக்கொண்டிருக்கின்றன. ஒரு விதத்தில் இது நல்லதுதான். "எவரைப்பற்றியும் யாரும் எந்நேரத்திலும் கவலைப்படத்தேவையில்லை" என்ற நோக்கத்தில் வாழ்க்கை வளைந்துக்கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். இந்த வேகத்தின் பொருட்டு இவ்வாறான யோசனைகள் வந்தாலும், "எதற்கு நேரத்தை வீணடிக்கவேண்டும்" என்ற எண்ணம் வந்துவிடுகிறது. விடுங்கள்.

பிராமணர்கள் மாமிசம் சாபிடுவதில்லை, அது அந்தக் காலம். நான் கூறுவது இந்தக்காலம். சிக்கன் புல் மீல்ஸ் கட்டும் பிராமணர்களில் நானும் ஒருவன். இதில் பெருமைப்பீதிக்கொள்ள எதுவும் இல்லை. நன்றாக இருக்கிறது, தின்கிறேன். இதை வெளிப்படையாக சில பார்பனர்களிடம் பேசினால், அவர்கள் கூறும் சில மொழிகள்:

"நீயெல்லாம் பிராமணனா?" - என் கல்லூரி நண்பன் என்னிடம் கேட்டது.
"இல்லை. உண்மையான பிராமணன் யாரென்று தெரியாது, நீயும் கிடையாது" - என்னுடைய பதில்.

"இதெல்லாம் எல்லார்கிட்டேயும் சொல்லிண்டிருக்கதே" - என் அன்னை கூறியது.
"விடும்மா" - என் பதில்.

"இவனுக்கு சனி பிடிச்சிருக்கு. அதான் இதெல்லாம் தைரியமா செய்யறான்" - ஒண்ணு விட்ட சொந்தக்காரரின் வார்த்தை.
"சனி பகவான் என் நண்பன்" - மனதிற்க்குள் நானே எண்ணிக்கொண்டது.

"இப்போல்லாம் இதெல்லாம் சாதாரணம். சாப்டறதோ சாப்டர. அதுக்கப்றம் குளிச்சுட்டு காயத்ரி மந்திரம் சொல்லிடு, பாவம் ஒட்டிக்காது" - ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட உறவினர் கூறியவை.
"என்ன கொடுமை சரவணா" - வானதைப்பர்த்து நான் கூறியது.

இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். எதிர்ப்புகளை நேராக தெரிவித்தவர்கள் மிகவும் சிலர். கவலைக்கிடமில்லை. சந்தோசம். நான் சிறு வயதிலிருந்தே அசைவ சாப்பாட்டை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். சுவை நன்றாக இருந்தது, மேலும், ஒரு சிக்கன் துண்டை தின்பதில் ஒரு சுவாரசியம் இருந்தது. இட் வாஸ் ஏ சாலஞ். முதல் முறை சாப்பிட்டப்போதே வீட்டில் கூறிவிட்டேன். என்ப்பெற்றோர் விரிந்த மனப்பக்குவம் உடையவர்கள். "ஏன் சாப்டர?" என்று கேட்டார்கள். "பிடித்திருக்கிறது" என்றேன். "என்ஜாய், பட், பாட்டி தாத்தாட்ட சொல்லாதே" என்றார்கள். அதன் படியே நடந்தேன். இது என் கதை. இப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது, இன்று வரை.

சாந்தமாக செல்கிறது வாழ்க்கை என்று நினைக்கும் போது, சில மனிதர்கள் குழப்பி விடுகிறார்கள். என் மாமா கூறியவை:

"நானும் உன்ன மாதிரி எல்லாம் சாப்டுண்டுதான் இருந்தேன் டா. இப்போ எல்லாம் சாப்ட்டுக்கோ. ஆனா ஒண்ணு மட்டும் மறக்காதே. நான் நெரிய பட்ருக்கேன் வாழ்க்கைல. மத்தவன் அனுபவத்துல படிக்கறவன் புத்திசாலி; தன்னோட அனுபவத்துல படிக்கறவன் கொஞ்சம் முட்டாள்; பட்டும் படிக்காதவன் அதி முட்டாள்" என்று கூறிச்சென்றார். கியூரியாசிடியின் காரணமாக நான் கொஞ்சம் முட்டாள் ஆகிறேன். பரவாயில்லை.

முக்கால்வாசி உண்மை / பொய் ஞானிகள், வாழ்க்கையில் எல்லா விஷயங்களை செய்து முடித்தப்பிறகு ஞானம் பெறுகிறார்கள் அல்லவா? அது ஞாயமா? அப்படி சில விஷயங்களை உணர்கிறவர்கள் ஞானிகளா? "அர்த்தமுள்ள இந்துமதம்" என்றப் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் என்ன கூறுகிறார் என்றால்:

"நாளையைப்பற்றி நினைக்காதே, நேற்று நடந்ததை மறந்துவிடு. வருபவை எதுவாயினும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்." - இப்படி வாழ்பவர் வெறும் மனிதரா இல்லை ஞானியா? சற்று உள்நோக்கிப்பார்த்தால், ஞானி கூட இதைதான் செய்ய முற்படுகிறார் இல்லையா? அப்போது யார் ஞானி, யார் மனிதன்? இந்தக்கேள்விக்கு விடைக்கிடைத்துவிட்டால், "கொன்னாப்பாவம் தின்னாப்போச்சு" என்பதற்கு விடைக்கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்.

இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதிகள் இருந்தது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். கூறியவர்கள் எல்லோரும் பித்துபிடித்தவர்கள் ஆக முடியாது. ஏதோ ஒரு மிஸ்ஸிங் லிங்க் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதை நாம் தொலைத்திருக்கக்கூடும். தெரியவில்லை.

"இறைவன் இருக்கானா இல்லையா?" என்ற கேள்வியை விட, "யார் ஞானி, யார் மனிதன்?" என்ற கேள்விக்கு ஆயிரத்திற்கும் மேல் பதில்கள் உள்ளன. அந்த ஆயிரத்தில் ஒரு பதில் கூடவா சரியான பதில் இல்லை?

அவரவருக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு பதிலை எடுத்துக்கொண்டு அதான் உண்மை என்று அலைந்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் பலர். சில நபர்கள் அதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. சிலர், அதை நினைத்துக்கொண்டு குழம்பி நேரத்தை வீணடிக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

இந்தக்கேள்விக்கு பைனரி பதில் கிடையாது என்றால் மக்கள், ஞானிகள், கடவுள் (அப்படி இருந்தால்) எல்லோரும் குழம்பியவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா?

தெளிவானவன் தெளிவான விடையை என்றும் அளிப்பான். இல்லாவிடில் அவனிடம் காண்பது தெளிவல்ல, ஞானம் அல்ல. வெறும் அறியாமை.

இதுவரை நான் செய்வது:

"நான் கொல்லமாட்டேன். திம்பேன், சிலபொழுது சுவைக்காக, சிலபொழுது வயிறை நிரப்ப!"

இதை இப்படி மாற்றினால் தத்துவம் ஆகிவிடுமோ?

"நான் கொல்லமாட்டேன். திம்பேன்!
வயிறை நிரப்ப!"

அப்படியென்றால், வெகு விரைவில் நான் ஒரு ஞானி.