புதன், 24 ஜூலை, 2013

கொதிக்கும் சூரியன்..ஆனாலும் காதல்..

சுட்டெரிக்கும் வெய்யில்.. பாலையில் கூட இவ்வளவு வெப்பம் இருந்திருக்காது.. அது தான் சென்னையின் அன்றைய நிலைமை..

கூட்டமான பேருந்து நிறுத்துமிடத்தில் அவன், அவள்.. அவளில்லாமல் அவன் இல்லை.. அவனில்லாமலும் அவள் இல்லை என்றே சொல்லலாம்.. அவர்கள் பேசிக்கொள்வதில்லை, அனால் கண்கள் வார்த்தைகளை கொட்டும்.. அவர்கள் தினமும் இப்படிதான் பார்வைகளில் உரையாடுவார்கள்..

வேளச்சேரி போகும் பஸ் தினமும் அரைமணி நேரத்திற்கு ஒன்று தான்.. எட்டு மணி பஸ்ஸை அவள் மிஸ் பண்ணிவிட்டால் எட்டரை வரையில் வியர்த்து ஒழிகிக்கொண்டு நிற்க வேண்டும்.. அந்த அரை மணி நேரம் தான் இவர்களின் ஒரு யுக நீள பாலம்..கைகள் கோர்த்துக்கொண்டு நடப்பதற்கான ஒரு வாய்ப்பு..

இப்போது நிலைமை மிகவும் முன்னேறி விட்டது.. அவள் அவனைப்பார்த்து சிரிப்பதும், அவன் அவளைப்பார்த்து வெட்கப்படுவதும் வழக்கமாகி விட்டது.. சில நேரத்தில் அவன் நெற்றியில் வழியும் வியர்வை துளிகளைக்கூட இவள் தனது கைக்குட்டையால் துடைத்து விடுவாள்.. சுற்றியிருக்கும் மக்களும் அதைக் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.. பஸ் தான் அவர்களுக்கு முக்கியம்.. இளைஞர்கள் பப்ளிக்கில் அன்பை வெளிப்படுத்துவது சகஜமாகிவிட்டது.. மெட்ராஸ் மிகவும் முன்னேறிவிட்டது என்று தான் கூறவேண்டும்..

தன் கேர்ள்பிரண்டிர்க்கு சாக்லேட் வாங்கிக்கொடுப்பது தான் வழக்கம்... அனால் இங்கு நடப்பதோ வேறு மாதிரி.. அவள் இவனுக்கு தினமும் சாக்லேட் வாங்கிக்கொடுக்கிறாள்.. அவன் கொடுப்பதென்னவோ புன்னகை மட்டும் தான்.. 

தினமும் அதே பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுபவன் நான்.. இவர்கள் எங்கு பேசிக்கொள்வார்கள் என்று எனக்கு தெரியாது.. இவர்கள் ஒரே பஸ்ஸைக்கூட எடுப்பதில்லை.. ஆனால் பஸ் ஸ்டாப்பில் அலைகள் என்றும் ஓய்வதாக இல்லை! எப்படித்தான் இவ்வாறு இருக்கமுடியும்?

நான் மிகவும் பொறாமைப் படுகிறேன்.. இதே போன்று அவள் என்னிடமும் சிரித்திருந்தால் இந்த அளவிற்கு நான் கடுப்பாயிருப்பேனா என்பது சந்தேகம் தான்.. தினமும் இதே நேரத்தில் தான் நானும் பஸ் எடுக்க வேண்டும்.. அவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது எனது விதி போல தெரிகிறது..

அன்று ஒரு நாள்.. அவள் இருந்தாள் அனால் அவன் இல்லை.. மிக நிம்மதி என்று நான் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தமானேன்.. அதே நேரத்தில் அவளைப்பார்த்தாலும் பாவமாகத்தான் இருந்தது.. அவனைப்பார்க்காத ஏக்கம் அவள் முகத்தில் நன்று விளங்கியது.. என் பொறாமை தான் காரணமோ? மனதை கல்லாக்கிக்கொண்டு நான் செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தேன்.. பஸ் வந்தது.. அதில் ஏறிச்சென்றேன்.. அவள் மறைந்தாள்...

அடுத்த மூன்று நாட்களும் இதே மாதிரி தான் இருந்தது.. அவளது முகம் சுருங்கிக்கொண்டே இருந்தது.. அவனைக்காணவில்லை.. எனக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை.. பஸ் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடும்..

அப்போது அவள் என்னருகே வந்தாள்..

"ஹல்லோ சார்.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?"

"சொல்லுங்க.."

"தப்பா நெனச்சுக்காதீங்க..உங்கள கொஞ்ச நாளா இந்த பஸ் ஸ்டாப்பில நான் பாக்குறேன்.."

"அதுக்கு?"

"இல்ல சார்.. இங்க ஒரு அம்மா ஒரு அழாகான குழந்தைய கூட்டிட்டு வருவாங்களே.. அவங்கள கொஞ்ச நாளா காணோம்.. அதான் உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்.."

"ஓ தெரியுமே.. அவள் வீட்டுல தான் இருக்கா"

"சார் ஜோக் பண்ணாதீங்க.."

"இல்லே மா.. அவ என் வீட்டுல தான் இருக்காள்.. அவ என் பொண்டாட்டி.."

"அட.. அப்போ அது உங்க குழந்தையா?"

"ஆமாம்.."

"ரொம்ப அழகா இருக்கான் சார்.. பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு..."

"அவளுக்கு ஒடம்பு சரியில்லை.. அடுத்த வாரம் வந்துடுவாள்..."

"சரி சார்.. இந்த சாக்லேட்டை அவனுக்கு குடுத்துடுங்க.."

"இல்லை பரவால்லை.."

"இல்லை சார்..பிளீஸ்.. இல்லாட்டி என்னை மறந்துடுவான்.."

"சரி சரி..குடு.."

"தாங்க்ஸ் சார்.."

அப்போது என் பஸ் வந்தது.. கிளம்பி விட்டேன்..

ஆனாலும் என் மகன் அதிர்ஷ்டசாலி தான்.. எவ்வளவு காதலிகள் அவனுக்கு! அதைப்பார்த்து நான் பொறமை படக்கூடாது.. சாக்லேட்டை என் பையில் வைத்தேன்.. அப்படியே என் இமைகளை மூடினேன்.. சட்டென்று என் குழந்தைப்பருவம் எனக்கு முன்னால் இருள் திரையில் வந்தது..

2 கருத்துகள்: